சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு பிணை

by Staff Writer 07-02-2022 | 2:31 PM
Colombo (News 1st) பயங்கவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர, நீல் இத்தவெல ஆகியோரால் பிணை வழங்குவதற்கான உத்தரவு இன்று (07) பிறப்பிக்கப்பட்டது. தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பிணை திருத்த மனு இன்று (07) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கட்டளையை புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். புத்தளம் பகுதியிலுள்ள மதரசா ஒன்றில் மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை கற்பித்தமை தொடர்பில் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.