இந்திய மீனவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி

இந்திய மீனவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 07-02-2022 | 5:40 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிடம் சிறைச்சாலைக்குள் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களில் ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டு, இயக்கச்சி COVID - 19 சிகிச்சை முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (07) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, யாழ். துணை தூதரக அதிகாரி ஒருவரும் மன்றில் ஆஜராகியிருந்தார். மீனவர்கள் எவரும் இன்று (07) மன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை. மீனவர்கள் தொடர்பான குற்றப்பத்திரத்தை சமர்பிப்பதற்கு அவர்களிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினால் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கமைய, யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் கிருஷாந்தன் பொன்னுதுரை அனுமதி வழங்கியுள்ளார். கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பான கட்டளையை யாழ். சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, மீனவர்களின் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட 100 கிலோ கிராம் மீன், குளிரூட்டியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்குமாறும் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொண்ட நீதவான் கிருஷாந்தன் பொன்னுதுரை, மீன்களை விற்பனை செய்து அதற்கான பணத்தை மன்றில் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் 21 ஆம் திகதி இந்திய மீனவர்கள் 21 பேரையும் மன்றில் ஆஜர்படுத்த வேண்டும் என பருத்தித்துறை நீதவான் இன்று (07) உத்தரவிட்டுள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து, வடக்கு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த முதலாம் திகதி இரவு இந்திய மீனவர்களின் 02 படகுகள் மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்கள் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், திணைக்கள அதிகாரிகளால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.