அடையாளம் காணப்பட்ட வௌ்ளவத்தையில் மீட்கப்பட்ட சடலம்

வௌ்ளவத்தையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

by Staff Writer 06-02-2022 | 2:32 PM
Colombo (News 1st) வௌ்ளவத்தை கடற்கரையில் மீட்கப்பட்ட 02 சடலங்களில் ஒரு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உடலில் வெட்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் மாலைதீவு பிரஜையினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இலங்கையில் தங்கியிருந்த மாலைதீவை சேர்ந்த 24 வயதான அப்ஹம் நாசீர் என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் வசித்த மாலைதீவு மாணவரான அப்ஹம் நாசீர், காணாமல் போயுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன. அந்த செய்திக்கமைவாக மாணவரின் உறவினர்கள் அவரை இறுதியாக கடந்த 04 ஆம் திகதி கண்டுள்ளதுடன் அதன்போது அவர் கறுப்பு நிற மேற்சட்டையை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த மாணவர் தெஹிவளையில் வசித்து வந்துள்ளார்.