பயங்கரவாத தடைச்சட்டம்: கைதான நால்வருக்கு பிணை

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான நால்வருக்கு பிணை

by Bella Dalima 02-02-2022 | 3:50 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - ஏறாவூரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 04 பேருக்கு பிணை வழக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய சந்தேகநபர்கள் நான்கு பேருக்கும் பிணை வழங்கி நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். செங்கலடி, சித்தாண்டி, ஏறாவூர் மற்றும் ஐயங்கேணி பகுதிகளை சேர்ந்த நான்கு பேர் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27, 28 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்டனர். தமது முகப்புத்தகத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவருடைய நிழற்படத்தை பதிவேற்றிய குற்றச்சாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். சுமார் 13 மாதங்களின் பின்னர் சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய சந்தேகநபர்கள் நால்வரும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என சந்தேகநபர்களுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.