நுரைச்சோலை மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்தது

by Staff Writer 01-02-2022 | 4:06 PM
Colombo (News 1st) நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள மின்பிறப்பாக்கி ஒன்று மீண்டும் செயலிழந்துள்ளது. இதனால் தேசிய கட்டமைப்பில் 270 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளரும் மேலதிக பொது முகாமையாளருமான அன்ரூ நவமணி குறிப்பிட்டார். இதனிடையே, கொழும்பு துறைமுகத்திலுள்ள மிதக்கும் மின்னுற்பத்தி நிலையமும் சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையமும் தற்போது செயலிழந்துள்ளன. மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான டீசல் மற்றும் ஏனைய எரிபொருள் ஒன்றரை நாட்களுக்கு மாத்திரமே போதுமானதாக உள்ளதென இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, இந்த வாரம் நாளாந்த மின்னுகர்வு 100 மெகாவாட்டால் அதிகரித்துள்ளது. இதனால் எரிபொருள் உரிய காலத்திற்குள் கிடைக்காவிடின், மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் கூறினார்.