COVID-19 தொடர்பான புதிய வழிகாட்டல்கள்

COVID-19 தொடர்பான புதிய வழிகாட்டல்கள்

by Bella Dalima 28-01-2022 | 3:25 PM
Colombo (News 1st) COVID-19 நோயாளர்கள் மற்றும் நோயாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் மேற்கொள்ள ​வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன. புதிய பிறழ்வுடன் மாற்றமடைந்துள்ள வைரஸின் செயற்பாடு, தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் கொரோனா தொற்று தொடர்பிலான விஞ்ஞானபூர்வ தரவுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய வழிகாட்டல் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, முழுமையாக தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ஒருவர் COVID நோயாளருடன் தொடர்பில் இருந்த முதல் நபராக இருந்தாலும், நோய் அறிகுறிகள் காணப்படாவிடின் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்க முடியும். சில குழுவினரே முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களாக கருதப்படுகின்றனர். இதனடிப்படையில், 20 வயதிற்கு மேற்பட்டோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதங்கள் கடந்தால், பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்தல் அவசியமாகும். இரண்டாவது தடுப்பூசியை பெற்ற ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து ஒரு மாத இடைவெளியில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும். மேலும், 16 மற்றும் 19 வயதிற்குட்பட்ட சிறார்கள், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று இரண்டு வாரங்களுக்கு பின்னர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாகக் கருதப்படுவர். 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் ஒரு தடுப்பூசி ஏற்றப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக கருதப்படுவர். இவ்வாறு முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத, நோயாளர்களுடன் முதலில் தொடர்புகளை பேணுபவர்கள், 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அறிகுறிகள் ஏற்பட்டால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.