45 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து: ஒருவர் பலி, 15 பேர் காயம்

by Bella Dalima 28-01-2022 | 3:52 PM
Colombo (News 1st) ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று ஹட்டன் - டிக்கோயா பிரதேசத்தில் விபத்திற்குள்ளாகியது. சுமார் 45 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்திற்குள்ளானதுடன், விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 16 பேருடன் ஹட்டன் நோக்கி பயணித்த பஸ்ஸே இன்று காலை 6.45 அளவில் விபத்திற்குள்ளாகியது. இதன்போது, பஸ் எதிர்பாராத விதமாக சலங்கந்த எனும் பகுதியில் பள்ளத்தில் குடைசாய்ந்துள்ளது. விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 60 வயதான, போடைஸ் தோட்டத்தை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த 15 பேர் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால், விபத்து இடம்பெற்றிருக்கலாம் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.