ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

by Bella Dalima 28-01-2022 | 4:21 PM
Colombo (News 1st) சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை கோரிக்கை புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான வழக்கு புத்தளம் மேல் நீதிமன்றத்தில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்குவதற்கு அதிகாரமில்லையென்ற நிலைப்பாட்டில் இதற்கு முன்னர் பிணை நிராகரிக்கப்பட்டுள்ளமையினால், அதே நிலைப்பாட்டில் பிணையை நிராகரிப்பதாக நீதவான் தெரிவித்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை கோரிய போது, அதற்கு ஆட்சேபனை இல்லையென சட்டமா அதிபர் அறிவித்திருந்ததாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்திரதிஸ்ஸ மன்றில் சுட்டிக்காட்டினார். மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்குமாறு கோரினால் அதனை நகர்த்தல் பத்திரத்தினூடாக அறிவிக்குமாறும் முடியுமான முதலாவது தினத்திலேயே பிணை வழங்குவதாகவும் மேல் நீதிமன்ற நீதிபதி இதன்போது கூறியுள்ளார். இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டு, தடுத்த வைக்கப்பட்டதன் பின்னர் சட்ட மா அதிபர் திணைக்களம் தற்போது மேல் நீதிமன்றத்தில் குற்ப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா இன்று கோரிக்கையொன்றை முன்வைத்த போதிலும் மேல் நீதிமன்ற நீதிபதி அதனை நிராகரித்தார். இன்று (28) முற்பகல் புத்தளம், மதரஸா பாடசாலையின் முன்னாள் மாணவர் ஒருவரான மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக் சாட்சி வழங்கும் போது, ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தமது பாடசாலைக்கு வந்த தினம் தொடர்பில் அவர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளமையினால், சட்டமா அதிபர் திணைக்களம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ​போது தமது சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அவரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமையினால் இந்த வழக்கின் மேற்பார்வையாளராக கலந்துகொள்வதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெதகொட நீதிமன்றத்திற்கு அறிவித்தார். மனு மீதான விசாரணை பெப்ரவரி 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதுடன், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.