COVID தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வைத்தியசாலைகளில் COVID தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Staff Writer 28-01-2022 | 8:08 PM
Colombo (News 1st) கொழும்பு தேசிய வைத்தியசாலை, தேசிய தொற்றுநோயியல் பிரிவு, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் முக்கியமான வைத்தியசாலைகளில் COVID தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தொற்றுக்குள்ளான சிறார்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் G.விஜேசூரிய தெரிவித்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 5 ஆம் இலக்க வார்ட்டில் COVID தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தேசிய தொற்றுநோயியல் பிரிவில் உள்ள நோயாளர்களின் கட்டில்களின் எண்ணிக்கை நிரம்பியுள்ளதாக குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஹசித அத்தநாயக்க நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்குள் 30 COVID தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வந்த கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இன்று 60 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 40 தொடக்கம் 50 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் G.விஜேசூரிய தெரிவித்தார். COVID தடுப்பூசியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ஒரு வருடம் ஆகின்றது. எனினும், நாட்டில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்திலேயே உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்தது.