by Staff Writer 28-01-2022 | 8:22 PM
Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் கடந்த புதன்கிழமை (26) இராஜதந்திரிகளை தௌிவுபடுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டார்.
வௌிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னர், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான தகவல்களை பரிமாற்றிக்கொள்வது இந்த சந்திப்பின் நோக்கமாக இருந்தது.
உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் காரணமாக பொறுப்புக்கூறல், மறுசீரமைப்பு, நீதி, அர்த்தமுள்ள நல்லிணக்கம் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்களவில் நடவடிக்கை எடுத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கும் நோக்கில் 43 வருடங்களின் பின்னர் அதனை திருத்துவதாக இதன்போது அமைச்சர் கூறியுள்ளார்.
பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னரே பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் கீழ், ஆலோசனைக் குழுவை ஸ்தாபிப்பது தொடர்பிலும் அமைச்சர் தௌிவுபடுத்தியதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இதனிடையே, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் வழக்கு தொடர்பில் அண்மைக்காலத்தில் கிடைத்துள்ள அடைவு மட்டம் தொடர்பில் இராஜதந்திரிகளை தௌிவுபடுத்தி வெளிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குவதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லையென சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.