தமிழக மீனவர்களால் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி கோரும் தமிழக மீனவர்கள்

by Staff Writer 28-01-2022 | 8:32 PM
Colombo (News 1st) கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்வதற்கு தமக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என தமிழகத்தின் பாரம்பரிய மீனவர்கள் கோரியுள்ளனர். பாரதத்தின் தமிழகத்தில் பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் குழுக்கூட்டம் பாம்பன் வடக்கு கடற்கரையில் இன்று நடைபெற்றபோது மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1. கச்சத்தீவு திருவிழாவில் இந்திய பாரம்பரிய மீனவர்கள் 200 பேருக்கு COVID விதிமுறைகளைக் கடைப்பிடித்து கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் 2. இந்திய படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், நல்ல நிலையிலுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவேண்டும் 3. இலங்கை மீனவர்களின் வசமுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகு, நாட்டுப் படகுகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையினை மீள் பரிசீலனை செய்தல் இதேவேளை, இலங்கை - தமிழக மீனவர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய விருவிழா COVID நிலைமை காரணமாக இம்முறை தமிழக மக்களின் பங்குபற்றுதல் இன்றி நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அண்மையில் அறிவித்திருந்தார். இதனிடையே, திருவிழாவில் கலந்துகொள்ளும் இலங்கை பக்தர்களும் மூன்று COVID தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என கச்சத்தீவு ஆலய பரிபாலகரும் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.