துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற 4 பேரை தேடி விசாரணை

அம்பியூலன்ஸ் சாரதியை துப்பாக்கியால் சுட முயன்ற நால்வரைத் தேடி விசாரணை

by Staff Writer 27-01-2022 | 6:54 PM
  Colombo (News 1st) பாணந்துறை வைத்தியசாலை முன்பாக தனியார் வைத்தியசாலையொன்றின் அம்பியூலன்ஸ் சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் துப்பாகிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சி செய்துள்ளார். எனினும், அதன்போது துப்பாக்கி இயங்கவில்லையென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். பாணந்துறை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (27) முற்பகல் 11 மணியளவில் அம்பியூலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது. தனியார் வைத்தியசாலையொன்றில் இருந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கர்பிணித் தாய் ஒருவரை ஏற்றி வந்த அம்பியூலன்ஸை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு பேர் பின்தொடர்ந்துள்ளனர். அம்பியூலன்ஸ் பாணந்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்ததன் பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இறங்கி சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார். எனினும், அந்த முயற்சி பயனளிக்காமையினால் சந்தேகநபர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்து தோட்டாவொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தப்பிச்சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளில் பாணந்துறை தெற்கு பொலிஸாரும் மேலும் சில குழுக்களும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.