X-Press Pearl கப்பல் மூழ்கி 7 மாதங்கள்

by Staff Writer 26-01-2022 | 8:42 PM
Colombo (News 1st) X-Press Pearl கப்பல் இலங்கை கடலில் மூழ்கி ஏழு மாதங்களாகின்றன. இந்த கப்பலில் அபாயகரமான பொருட்கள் அடங்கிய 81 கொள்கலன்கள் இருந்ததுடன், அதில் 25 தொன் நைட்ரிக் அமிலமும் அடங்குகிறது. இரசாயனக் கசிவு இருந்ததால், X-Press Pearl கப்பலை பல துறைமுகங்கள் நிராகரித்திருந்தன. முகாமைத்துவத்திற்கான எவ்வித இயலுமையும் அற்ற நிலையில், அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தின் வௌிப்புற துறைமுக வளாகத்திற்குள் நுழைய அனுமதியளிக்கப்பட்ட நிலையில், அது தீப்பற்றியது. அண்மைக்காலத்தில் உலகில் பதிவான மிகப்பெரிய அளவில் கடல் மாசடைந்த சம்பவமாக இது அமைந்தது. எனினும், இந்த பேரழிவிற்காக இதுவரை இலங்கை 3.6 மில்லியன் டொலர்களை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது. அதிகபட்ச நட்டஈட்டினை பெற்றுக்கொள்வதற்கு இலங்கையின் சட்டங்கள் போதுமானது அல்லவென கணக்காய்வு விசாரணைகளின் போது உறுதியானது. உலகிலுள்ள வேறு ஏதேனும் ஒரு நாட்டிற்கு அருகில் இந்த விபத்து நேர்ந்திருந்தால், அந்தநாடுகள் பில்லியன் கணக்கான டொலர்களை நட்டஈடாக வசூலித்திருப்பார்கள். X-Press Pearl விபத்தினால் சமுத்திர சுற்றுச்சூழலுக்கும் மீனவர்களுக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்து உரிய நட்டஈடு எப்போது பெற்றுக்கொள்ளப்படும்?