நாட்டிற்கு தங்கம் சேர்த்த தமிழ் மங்கை

by Staff Writer 26-01-2022 | 12:25 PM
Colombo (News 1st) பாகிஸ்தானில் நடைபெற்ற 2 ஆவது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்குகொண்டு முல்லைத்தீவு வீராங்கனை கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் வசித்து வருகின்றார். தந்தையின் இழப்புடன் தாயின் அரவணைப்பில் வளர்ந்த இந்துகாதேவி, கடந்த 18 ஆம் திகதி பாகிஸ்தானில் நடைபெற்ற 2 ஆவது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றிருந்தார். கடும் சவால்களுக்கு மத்தியிலும் பெண்களுக்கான 25 வயதுக்குட்பட்ட 50 - 55 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இந்துகாதேவி, நாட்டிற்கு தங்கப் பதக்கம் வென்றெடுத்துள்ளார். கணேஷ் இந்துகாதேவியின் இல்லத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சின் வட மாகாண திட்ட முகாமையாளர் காமினி கொஸ்தா சென்றிருந்ததுடன் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.