சிலிண்டர்களை மீள கையேற்பது தொடர்பான அறிவித்தல்

எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பது தொடர்பில் நாளை (27) அறிவித்தல்

by Staff Writer 26-01-2022 | 3:14 PM
Colombo (News 1st) குறைந்தளவில் பயன்படுத்திய அல்லது சந்தேகத்திற்கிடமான எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பதற்கான இயலுமை உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பது தொடர்பில் பொதுமக்களை தௌிவூட்டுவதற்கான அறிவித்தலை நாளைய தினம் (27) இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக வௌியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மூன்று மொழிகளிலும் தேசிய பத்திரிகைகளூடாக இன்று அறிவித்தல்கள் பிரசுரமாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி மனோஹர ஜயசிங்க குறிப்பிட்டார். குறைந்தளவில் பயன்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகத்திற்கிடமான எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்குமாறு நீதிமன்றத்தால் இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய, நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் எரிவாயு நிறுவனங்கள் செயற்படவில்லை என தெரிவித்து நாகானந்த கொடித்துவக்கினால் முறைப்பாடு முன்வைக்கப்பட்ட போதே அரச சிரேஷ்ட சட்டத்தரணி இதனை கூறினார். அபாயமிக்க சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கின்றமை தொடர்பில் லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு மீதான விசாரணையின் போதே நாகானந்த கொடித்துவக்கினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதிகளான ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லாஃப் நிறுவனம் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகரவிற்கு COVID தொற்று ஏற்பட்டுள்ளமையால், மனு மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.