by Staff Writer 25-01-2022 | 11:58 PM
டீசல் மற்றும் எண்ணெய் கிடைத்துள்ளமையால் எவ்வித தடையுமின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
எனினும், அவசர நிலைமைகளின் போது திடீரென மின் உற்பத்தி தடைப்பட்டால், அதனை சீரமைக்கும் வரை மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபைக்கு 10,000 மெட்ரிக்தொன் டீசலை நேற்றிரவு வழங்கியுள்ளது.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 15,000 மெட்ரிக் தொன் எண்ணெய், சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மிதக்கும் மின் நிலையங்களுக்கு விடுவிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தில் எண்ணெய்க்கு பதிலாக டீசலை பயன்படுத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டாலும் மாலை 6.40 முதல் இரவு 7.20 வரையான காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்ப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே நெருக்கடிக்கு தீர்வாக இந்திய கடன் சலுகையின் அடிப்படையில் நேரடியாக மின்சாரத்தை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், மூன்று நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த வெண்டிய தேவை எழவில்லை என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக 27 ஆம் திகதி மீள் பரிசீலனை செய்யப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.