விசாரணையை துரிதப்படுத்துமாறு உத்தரவு

பொரளையில் கைக்குண்டு மீட்பு: விசாரணையை துரிதப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 25-01-2022 | 4:59 PM
Colombo (News 1st) பொரளையில் உள்ள அனைத்து புனிதர்கள் தேவாலய வளாகத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தாம் கருதுவதாக தெரிவித்த நீதவான், விரைவாக விசாரணையை நடத்தி அதன் முன்னேற்றத்தை அடுத்த மாதம் 2 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் திருப்தியடையவில்லை எனவும் விசாரணைகளை வேறு பொலிஸ் பிரிவிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுமாறும் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரி​யென்சி அரசகுலரத்ன மன்றில் கோரிக்கை விடுத்தார். சம்பவம் தொடர்பான உண்மையை கண்டறிவதற்கும், உண்மையான சந்தேகநபர்களை கைது செய்வதற்கும் நியாயமானதும் நீதியானதுமான விசாரணை நடத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராயுமாறு, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தின் பங்குத்தந்தைகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நெவில் அபேரத்ன கோரிக்கை விடுத்தார்.