சம்பூரில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம்?

சம்பூரில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம்: இந்தியாவுடனான உடன்படிக்கைக்கு திட்டம்

by Staff Writer 24-01-2022 | 7:39 PM
Colombo (News 1st) சம்பூரில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்காக இந்தியாவின் அரச நிறுவனமான NTPC எனப்படும் National Thermal Power Corporation Limited நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். NTPC நிறுவனம் இந்தியாவில் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இலங்கையின் மொத்த மின் உற்பத்தி 4,300 மெகாவாட்டை விட அதிகரிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, மன்னாரில் 5,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பிலும் இரு தரப்பினரும் ஆராய்ந்து வருவதாக மிலிந்த மொரகொட குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின்சாரத்தை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்குள்ள இயலுமை தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ள இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான மின் கம்பி கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவது பாரிய விடயமாக அமையாது எனவும் கூறியுள்ளார்.