களுவாஞ்சிக்குடியில் பீப்பாய்க்குள் தவறி வீழ்ந்து பிஞ்சுக் குழந்தை பலி

by Staff Writer 22-01-2022 | 5:52 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி சமுத்திரபுரம் பகுதியில் நீர் நிரம்பிய பிளாஸ்டிக் பீப்பாய்க்குள் வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (21) மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்றரை வயதான சர்மிலன் கனிஸ்ரிகா என்ற சிறுமியே பிளாஸ்டிக் பீப்பாய்க்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். ஜம்பு பழத்திலிருந்த எறும்புகளை கழுவ முற்பட்டு சிறுமி பிளாஸ்டிக் பீப்பாய்க்குள் தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சிறுமியின் உடலில் வேறு காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். அனர்த்தம் இடம்பெற்ற போது சிறுமியின் தாய் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளார். நீதவான் விசாரணைகளின் பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டதுடன், இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன.