பாட்டலிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பாட்டலிக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் ஒத்திவைப்பு

by Staff Writer 21-01-2022 | 3:10 PM
Colombo (News 1st) இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் போலி சாட்சியங்களை முன்வைத்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் இன்று நடைபற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் இன்று மன்றில் ஆஜராகினர். முதல் பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாதமை தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை, சட்டமா அதிபரால் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 10 பரிசோதனைகளின் அடிப்படையில், பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் உடல் நிலை சாதாரணமாகவே உள்ளதென மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார். இதனடிப்படையில், நீதிமன்ற செயற்பாடுகளை தாமதிப்பதற்காக முதல் பிரதிவாதி வேண்டுமென்றே செயற்பட்டுள்ளமை தெரியவருவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டதுடன், விரைவில் வழக்கு விசாரணையை ஆரம்பிப்பதற்கு திகதியொன்றை அறிவிக்குமாறும் கோரியுள்ளார். திடீர் சுகயீனத்தினால் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பல்வேறு பரிசோதனைகளை எடுக்க நேரிட்டதாகவும் நீதிமன்ற செயற்பாடுகளை தாமதிப்பதற்காக செயற்படவில்லை எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்தார். இதனடிப்படையில், வழக்கு விசாரணை அடுத்த மாதம் 18 மற்றும் 23 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.