நாளை (22) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

by Staff Writer 21-01-2022 | 5:13 PM
Colombo (News 1st) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (22) நடத்தப்படவுள்ளது. COVID தொற்றினால் பிற்போடப்பட்டிருந்த புலமைப்பரிசில் பரீட்சை, முன்னர் குறித்த தினத்தின் படி நாளைய தினம் நடைபெறவுள்ளது. 2021 ஆம் ஆண்டில் குறித்த பரீட்சையை நடத்துவதற்கு திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்திருந்தது இதன்படி 2,943 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், தமிழ் மொழி மூலமாக 85,445 மாணவர்களும் சிங்கள மொழி மூலமாக 2,55,062 மாணவர்களுமாக மொத்தம் 3,40,507 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். COVID தொற்று நிலை காரணமாக தமது பரீட்சைக்கு தேவையான உபகரணங்களை உரிய மாணவர்கள் வைத்திருக்க வேண்டுமெனவும் பிற மாணவர்களிடமிருந்து பெறுவதற்கு அனுமதியில்லை எனவும் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் S.பிரணவதாசன் தெரிவித்தார். காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால், 8 மணிக்கு முன்னரே மாணவர்களை அழைத்து வருமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.