கமநல அபிவிருத்தி வங்கிகளை பலப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 21-01-2022 | 8:45 PM
Colombo (News 1st) இம்முறை பெரும்போகத்தின் போது சேதன பசளை விநியோகம் , பயன்பாடு மற்றும் கிடைக்கும் விளைச்சலை ஆராய்ந்து அடுத்த சிறுபோகத்திற்கு தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (21) கமநல சேவைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். அரச தலைவர் ஒருவர் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த இரண்டு வருடங்களில் கைவிடப்பட்டுள்ள வயல்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் திட்டத்தில் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கைவிடப்பட்ட வயல்களில் அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத காணிகளில் வேறு பயிர்களை பயிரிடுமாறு இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். விவசாயிகளுக்கு போகம் மற்றும் வருடாந்த முறையில் 2 இலட்சத்தில் இருந்து 10 இலட்சம் வரை கடன் வழங்கும் 559 கமநல அபிவிருத்தி வங்கிகள் நாடளாவிய ரீதியில் உள்ளன. அதிக வட்டியில் விவசாயிகள் கடன் பெற்றுக்கொள்வதை தவிர்க்கும் வகையில் இந்த வங்கியை பலப்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.