சைபர் தாக்குதலுக்கு இலக்கான செஞ்சிலுவை சங்கம்

சைபர் தாக்குதலுக்கு இலக்கான சர்வதேச செஞ்சிலுவை சங்கம்; 5,15,000 பேரின் தகவல்கள் திருட்டு

by Bella Dalima 20-01-2022 | 6:41 PM
Colombo (News 1st) சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலில், போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட அரை மில்லியனுக்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதிநவீன முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சைபர் தாக்குதலுக்கு தமது அமைப்பு இலக்காகியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமற்போனவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டவர்களுக்காக இந்த அமைப்பு இயங்கி வருகின்றது. இந்த நிலையில், குறித்த சைபர் தாக்குதலை மேற்கொண்டது யாரென்பது தெரியாதுள்ளது. யார் தரவுகளைப் பெற்றிருந்தாலும், அதனைக் கசிய விடவோ, யாருடனும் பகிரவோ வேண்டாமென சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சைபர் தாக்குதலின் போது, போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 5,15,000 பேரின் மிகவும் இரகசியமான தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. இந்த தரவுகள் உலகளாவிய ரீதியிலுள்ள 60 செஞ்சிலுவை சங்கங்கள் மற்றும் செம்பிறை அமைப்புகளிலிருந்து பெறப்பட்டவையென அறிவிக்கப்பட்டுள்ளது. தரவுகளை சேமிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தால் பயன்படுத்தப்படும் வியன்னாவிலுள்ள நிறுவனமொன்றே ஊடுருவப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. கையாடப்பட்ட தரவுகள் இதுவரை கசியவிடப்படாத போதிலும், போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களை இது மிகவும் அபாயத்தில் ஆழ்த்தியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். போரினால் பிரிந்து போன குடும்பத்தவர்களை மீளிணைப்பதற்காக பயன்படுத்தும் கணினி பொறிமுறையை, இந்த சைபர் தாக்குதலையடுத்து அந்த அமைப்பு நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.