நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்படக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்படக்கூடும்

by Staff Writer 19-01-2022 | 3:50 PM
Colombo (News 1st) எரிபொருள் இன்மையால் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி கட்டமைப்பிலுள்ள இரண்டு மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனால் தேசிய மின் கட்டமைப்பிற்கான 282 மெகா வாட் மின்சாரம் இழக்கப்பட்டுள்ளதாக களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி கட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் மேலதிக பொது முகாமையாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளார். அத்துடன், இன்று பிற்பகல் கோரிக்கைக்கேற்ற விநியோகத்தை மேற்கொள்வதில் தடை ஏற்பட்டுள்ளதுடன், நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை தடை செய்ய நேரிடும் என அவர் கூறியுள்ளார். களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி தொகுதிக்கு தேவையான எரிபொருளை இன்று வழங்குவதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், எரிபொருள் கிடைத்ததன் பின்னர் மின்பிறப்பாக்கிகளை செயற்படுத்துவதற்கு மேலும் சில மணித்தியாலங்கள் செல்லும் என்பதுடன், அந்த காலப்பகுதியில் தேசிய மின்கட்டமைப்புடன் இணைப்பதற்கு தேவையான மின்சாரம் இல்லையெனவும் அன்ரூ நவமணி கூறியுள்ளார்.