செயலாளர்களுக்கு பாரிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன

எதிர்கால திட்டங்களை பூர்த்தி செய்யும் பொறுப்பு அமைச்சின் செயலாளர்களிடமே உள்ளது: ஜனாதிபதி

by Staff Writer 19-01-2022 | 3:31 PM
Colombo (News 1st) அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் பாரிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களை பூர்த்தி செய்வதற்கான பொறுப்பு அமைச்சின் செயலாளர்களிடமே உள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் செயலாளர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பிரதமரின் புதிய செயலாளராக அநுர திசாநாயக்க இன்று முற்பகல் ஜனாதிபதியிடம் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார். நீர்பாசன அமைச்சின் செயலாளராக இதுவரை செயற்பட்ட அநுர திசாநாயக்க, சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரியாவார். அவர் நாளை (20) தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வெற்றிடமாகவிருந்த நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் பதவிக்கு அய்வன் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத் இன்று முற்பகல் தனது கடமைகளை ஆரம்பித்தார்.