9 ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் இன்று

9 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று (18)

by Staff Writer 18-01-2022 | 8:26 AM
Colombo (News 1st) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று (18) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (18) முற்பகல் 10 மணிக்கு அரசின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தரும் நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (18) காலை 9.15 மணியளவில் விருந்தினர்களின் வருகை இடம்பெறவுள்ளது. பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோரின் பிரசன்னம் இடம்பெறவுள்ளது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு சகல சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.