நாட்டை வந்தடைந்த ஜெர்மனிய போர் கப்பல்

by Staff Writer 18-01-2022 | 8:41 AM
Colombo (News 1st) பயர்ன் (Bayern) எனப்படும் ​ஜெர்மனியின் போர் கப்பல், இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது. நேற்றைய தினம் (17) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பல் நாட்டை விட்டு வௌியேறுவதற்கு முன்னதாக இந்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜெர்மனியின் இந்தப் போர் கப்பல் நாட்டிற்கு வந்தடைந்துள்ளது. ஜெர்மனியின் பயர்ன் போர் கப்பல் 1996 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி சேவையில் இணைக்கப்பட்டது. அத்துடன், கடற்பரப்பு மற்றும் வான் பரப்பை கண்காணிப்பதற்கான வசதிகளும் அதி சக்தி வாய்ந்த ரேடார் கட்டமைப்பும் இதில் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்தக் கப்பல் இந்திய பசுபிக் பிராந்தியத்திற்கான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜெர்மனிய தூதரகம் தெரிவித்துள்ளது. வட கொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை பிறப்பித்திருந்த தடைகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக ஏற்கனவே இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டிருந்தது.