மீன்பிடிக்கச் சென்ற தந்தையும் மகனும் சடலங்களாக மீட்பு

by Staff Writer 17-01-2022 | 7:35 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடலில் மீன்பிடிக்க சென்ற தந்தையும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் நேற்று (16) மாலை 4.15 மணியளவில் படகொன்றில் மீன்பிடிக்க சென்ற நிலையில் இன்று வரை கரைக்கு திரும்பாததையடுத்து உறவினரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உயிர்பாதுகாப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் இன்று (17) மாலை 05 மணியளவில் தந்தை மற்றும் மகனின் சடலங்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அனர்த்தத்தில் 56 வயதான தம்பிமுத்து திசாநாயகம் என்பவரும் அவரது 21 வயதான மகன் திசாநாயகம் அகிலவாசனுமே உயிரிழந்துள்ளனர். மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட இவர்கள், காயங்கேணி - மாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் கடற்கரையிலேயே வைக்கப்பட்டுள்ளதுடன் நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.