சமூக ஊடக செயற்பாட்டாளர் சுதத்த திலகசிறியிடம் CID வாக்குமூலம் பதிவு

by Staff Writer 15-01-2022 | 7:47 PM
Colombo (News 1st) வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சமூக ஊடக செயற்பாட்டாளரும் கலைஞருமான சுதத்த திலகசிறி இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்து வாக்குமூலம் வழங்குமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுதத்த திலகசிறி அண்மையில் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார். இதனையடுத்து அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்,
என்னை கவனிக்கும் விதம் தொடர்பில், விசேடமாக கோட்டாபய Sir-க்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். உங்களை பதவியில் கொண்டு வருவதற்காக உணவின்றி gastritis தாக்கத்திற்குள்ளாகி, சொந்த செலவை மேற்கொண்டு உழைத்தேன். அதற்கு நீங்கள் செய்த பிரதியுபகாரத்திற்காக மிகவும் நன்றி. எனது பணியை நான் நிறுத்த மாட்டேன். தேவையெனில் என்னை சிறையில் அடையுங்கள்.
இதேவேளை, சுதத்த திலகசிறி நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்ததுடன், ஊழல் மோசடிகளை வௌிக்கொணர்ந்தவர் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். நான்கு மணித்தியாலங்கள் சுதத்த திலகசிறியிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.