பெண் மரணம்: வாக்குமூலம் பதிவு செய்யுமாறு உத்தரவு

CID விசாரணையின் போது பெண் மரணம்: வாக்குமூலங்கள் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 14-01-2022 | 8:40 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே கோட்டை பொலிஸாருக்கு நேற்று அறிவுறுத்தியுள்ளார். குறித்த பெண்ணின் கணவன், மூத்த சகோதரர் மற்றும் அவர் கைது செய்யப்பட்டபோது அங்கிருந்தவர்களிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது. களுபோவில பகுதியை சேர்ந்த குறித்த பெண் கடந்த 10 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அதற்கு அடுத்த தினம் காலை 5 மணியளவில் மலசலக்கூடத்திற்கு சென்ற வேளையில், மாடியிலிருந்து குதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பன்னிப்பிட்டியவை சேர்ந்த 46 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 6,83,40,000 ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டபோது களுபோவிலயில் இருந்தவர்களிடமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் கடமையிலிருந்தவர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.