பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு; விசாரணை ஆரம்பம்

by Staff Writer 12-01-2022 | 9:35 AM
Colombo (News 1st) பொரளை - வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேவாலயத்திற்குள் பிரவேசிக்கும் கதவிற்கு அருகிலுள்ள திருச்சொரூபத்திற்கு அருகிலிருந்து நேற்று (11) பிற்பகல் 4. 45 மணியளவில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டது. தேவாலயத்திற்கு வந்த ஒருவர் இது தொடர்பாக அருட்தந்தைக்கு தகவல் வழங்கியதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார். பின்னர் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அங்கு அழைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், கைக்குண்டு அந்த இடத்தில் வைக்கப்பட்டமையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். தேவாலயத்தின் பணிகளுக்காக இருந்த சிலரையும் விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.