விசுவமடு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது

by Staff Writer 11-01-2022 | 6:39 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு - விசுவமடு பகுதியில் இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞரின் தந்தையும் இளைஞருடன் மோதலில் ஈடுபட்ட மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களை முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட பகுதிக்கு பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று (10) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதையடுத்து அப்பகுதிக்கு சென்ற ஒருவரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் விசுவமடுவை சேர்ந்த 22 வயதான இளைஞரே காயமடைந்துள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றே பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.