மோடிக்கான கடிதத்தில் 7 தமிழ் கட்சிகள் கைச்சாத்து

இந்திய பிரதமருக்கான கடிதத்தில் 7 தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைச்சாத்து

by Staff Writer 11-01-2022 | 5:29 PM
Colombo (News 1st) இந்திய பிரதமருக்கான கடிதத்தில் 7 தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பிரதமருக்கான கடிதத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இன்று காலை கைச்சாத்திட்டதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களை வலியுறுத்தி எழுதியுள்ள கடிதத்தில் கையொப்பமிடும் நடவடிக்கை தற்போது முற்றுப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய பிரதமருக்கான கடிதம் இன்று அனுப்பப்படவிருந்த நிலையில், இந்திய தூதுவர் புது டெல்லி சென்றுள்ளதால், அவர் நாடு திரும்பியவுடன் ஆவணத்தை கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி குறித்த கடிதத்தை இந்தியத் தூதுவரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த ஆவணம் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் தொடர்ந்தும் இணைந்திருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன ஆவணத்தில் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.