ஓய்வுபெறும் கிரிக்கெட் வீரர்களுக்கான 3 நிபந்தனைகள்

ஓய்வுபெறும் வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முன்வைத்துள்ள நிபந்தனைகள்

by Staff Writer 08-01-2022 | 6:45 PM
Colombo (News 1st) வீரர்கள் ஓய்வு பெறுவது தொடர்பில் மூன்று தீர்மானங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழு மேற்கொண்டுள்ளது. போட்டிகளிலிருந்து ஓய்வுபெற விரும்பும் தேசிய கிரிக்கெட் வீரர்கள், அது தொடர்பில் மூன்று மாதங்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டுமென நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது. வௌிநாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆட்சேபனையற்ற சான்றிதழைப் பெற விரும்பும் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு, அவர்களது ஓய்வு நடைமுறைக்கு வந்த தினத்திலிருந்து 6 மாதங்கள் பூர்த்தியடைந்ததன் பின்னரே அது வழங்கப்படுமென்பது இரண்டாவது தீர்மானமாகும். LPL போன்ற உள்ளூர் லீக் போட்டிகளில் பங்கேற்பதாயின், குறித்த போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன்னர் நடைபெறும் 80 வீதமான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியிருந்தால் மாத்திரமே, அதற்கான தகுதியுடைய வீரராக ஓய்வுபெற்ற வீரரொருவர் கருதப்படுவார். இந்தத் நிபந்தனைகள் அனைத்தும் உடன் அமுலுக்கு வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.