மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதம்

இலங்கையில் கைதாகியுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் வலியுறுத்தல்

by Bella Dalima 08-01-2022 | 4:49 PM
Colombo (News 1st) கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 56 மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களையும் அவர்களின் 75 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் தமது கடிதத்தினூடாக வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர், ஏனைய 56 மீனவர்களையும் பாதுகாப்பாக அழைத்து வர முயற்சி எடுக்க வேண்டும் என வௌிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலங்கை சிறையில் வாடும் 56 மீனவர்களை விடுவித்து, அவர்கள் தமது குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதை உறுதி செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.