பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படக்கூடும்

by Bella Dalima 07-01-2022 | 5:39 PM
Colombo (News 1st) எரிசக்தி அமைச்சு எரிபொருள் வழங்காவிடின் நாட்டின் பல பகுதிகளில் இன்று மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் என சபை குறிப்பிட்டுள்ளது. கடந்த 23 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால், இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை. எரிபொருளுக்கான கொடுப்பனவை மின்சார சபை செலுத்தாமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் வழங்கப்படாவிடின் சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாற்போகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்னுற்பத்தி நிலையத்தில் 60 மெகா வாட் மின்சாரமும் சப்புகஸ்கந்தயில் 102 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகின்றது. இன்று (07) மாலைக்குள் எரிபொருள் வழங்கப்பட்டால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.