திருகோணமலை எண்ணெய் குதங்களை முழுமையாக இந்தியாவிற்கு வழங்க முயற்சி?

by Staff Writer 06-01-2022 | 8:49 PM
Colombo (News 1st) திருகோணமலை எண்ணெய் குதங்கள் கட்டமைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள இணக்கப்பாடு இந்தியாவிற்கு அதனை முழுமையாக வழங்கும் முயற்சியின் ஒரு கட்டமா என தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. தேசிய சொத்துக்களை பாதுகாப்பதற்கு வீதியில் இறங்க வேண்டி ஏற்படும் என திருகோணமலையில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்னிலையில் தேரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து காணப்படும் 99 எண்ணெய்க் குதங்களையும் 827 ஏக்கர் காணியையும் மூன்றாகப் பிரித்து 50 வருடங்களுக்கு மூன்று நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கிய பிரேரணைக்கு ஏற்ப, 14 எண்ணெய்க் குதங்கள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும் 24 குதங்கள் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் எஞ்சிய 61 குதங்கள் இந்திய எண்ணெய் நிறுவனம் மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஆகியன கூட்டிணைந்த நிறுவனத்திற்கும் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. 61 எண்ணெய் குதங்கள் மற்றும் அதன் காணியை 50 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்க புதிய நிறுவனம் ஒன்று தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. Trinco Petroleum Terminal தனியார் நிறுவனம் என்ற பெயரில் அது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் 51 வீத பங்குகள் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் 49 வீத பங்குகள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும் உரித்தானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிறுவன பதிவு திணைக்களத்தின் தரவுகளை ஆராயும் போது, தற்போது அந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் ஒரே ஒரு பங்காளராக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மட்டுமே உள்ளது தெரிகிறது. அதன் தற்போதைய தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க ஒரே ஒரு பணிப்பாளராகவும் பெயரிடப்பட்டுள்ளார். நிறுவன பதிவு திணைக்களத்தின் பதிவின் படி இந்த நிறுவனத்தின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?