கண்டி விஜயம்: தேரர்களிடம் ஆசி பெற்றுக்கொண்டார் ஜனாதிபதி

by Staff Writer 06-01-2022 | 5:35 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (06) கண்டியில் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார். மல்வத்து விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி, அனுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். இதேவேளை, மல்வத்து அனுநாயக்க தேரர் நியங்கொட விஜித்தசிறி தேரரையும் சந்தித்த ஜனாதிபதி, கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் எதிர்கால திட்டங்களுக்கு ஆசி வழங்கிய விஜித்தசிறி அனுநாயக்க தேரர், நினைவுச் சின்னமொன்றையும் அன்பளிப்புச் செய்துள்ளார். அதனையடுத்து, கெட்டம்பே ராஜோபவனாராமயவிற்கு சென்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ, இலங்கை ராமஞ்ஞ பீடத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கெப்பெட்டியாகொட சிறிவிமல தேரரை சந்தித்தார். இதன்போது நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் ஜனாபதிபதி விளக்கமளித்துள்ளார். இதேவேளை, கண்டி - ரஜ வீதியில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த எஹலபொல அரண்மனையின் புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி இன்று பிற்பகல் பார்வையிட்டார். பிரித்தானிய காலனித்துவ காலத்தில் சிறைக்கூடமாக விளங்கி, பின்னர் விளக்கமறியல் சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்ட கட்டடம், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டு தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.