பஸ்ஸை இயங்கவைக்க முயன்றவர் அந்த பஸ்ஸுக்கே பலியான சோகம்

by Staff Writer 05-01-2022 | 1:39 PM
Colombo (News 1st) தெஹியோவிட்ட பழைய பஸ் தரிப்பிடத்தில் பஸ்ஸில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (04) இடம்பெற்ற இந்த விபத்தில் இம்புல்கொட பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார். பஸ் திருத்தப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது திடீரென முன்னோக்கி வந்த பஸ்ஸில் சிக்கி இந்த விபத்து நேர்ந்துள்ளது. உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே, மட்டக்களப்பு - சந்திவௌி பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். மட்டக்களப்பு - சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி மதுபானசாலைக்கு முன்பாக இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் 04 பிள்ளைகளின் தந்தையான 69 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சந்திவௌி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.