குழந்தைகளை மனிதாபிமானமற்ற முறையில் தண்டித்த தந்தை கைது

by Staff Writer 03-01-2022 | 1:40 PM
Colombo (News 1st) தமது இரு குழந்தைகளையும் மரத்தில் கட்டி அவர்கள் மீது மிளகாய் தூள் தூவி சித்திரவதை செய்த தந்தையை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 6 வயதான சிறுவன் மற்றும் 7 வயதான சிறுமியுமே இவ்வாறு தந்தையால் தாக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சிறுவர்கள் சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் - குடாகம சமகி மாவத்தையை சேர்ந்த சிறுவர்களின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர் தமது இரு குழந்தைகளையும் வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்கு அனுப்பி வைத்ததாகவும் தந்தை கொண்டு வருமாறு கூறிய பொருட்களுக்கு மேலதிகமாக விறகு கட்டைகளை கொண்டு வந்த காரணத்தினாலேயே குழந்தைகள் தந்தையால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.