மணல் அகழ்விற்கு அனுமதி வழங்குவதில் மாற்றம்

2022-இல் மணல் அகழ்விற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை ஒரே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும்

by Bella Dalima 31-12-2021 | 3:35 PM
Colombo (News 1st) மண், மணல் மற்றும் கல் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கும் அகழ்வதற்குமான அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் நாளை (01) முதல் ஒரே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுமென புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு வருகைதந்து, சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியுமென அதன் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார். நாடளாவிய ரீதியிலுள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் கிளை அலுவலகங்களில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் கூறினார். இதற்கு முன்னர் மண், மணல் மற்றும் கல் என்பவற்றை கொண்டு செல்வதற்கும் அகழ்வதற்கும் அனுமதிப் பத்திரங்களை பெற பொதுமக்கள் நீண்ட நாட்களுக்கு அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இதனிடையே, கற்குவாரிகளுக்காக 03 வருடங்களுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார். தற்போது ஒரு வருடத்திற்காக மாத்திரமே அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றது.