பால் மா நிறுவனத்திற்கு முன்பாக நீண்ட வரிசை

பால் மா நிறுவனத்திற்கு முன்பாக நீண்ட வரிசை; காரணத்தை கண்டறியுமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Bella Dalima 31-12-2021 | 3:04 PM
Colombo (News 1st) உள்நாட்டு பால் மா நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கான காரணத்தை கண்டறியுமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இதனடிப்படையில், குறித்த பால் மா நிறுவனத்தின் தலைவருடன் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நேற்று கலந்துரையாடியதாக பொலிஸார் தெரிவித்தனர். மிரிஹான, ஸ்டான்லி திலகரத்ன மாவத்தையிலுள்ள கடையொன்றில் மிகவும் தாமதித்து ஜன்னல் ஒன்றின் ஊடாக பால் மா விற்கப்பட்டமையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில், விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பொதுமக்கள் வரிசையில் நிற்காமல் பால் மாவை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த பால் மா நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய பொலிஸாரின் தலையீட்டில் மிரிஹான பகுதியில் கலைக்கப்பட்ட, பால் மாவிற்காக ஒன்று கூடிய மக்களின் வரிசை இன்று மீண்டும் ஒன்று திரண்டது. சட்டரீதியாக மக்களின் வரிசையை கலைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மக்களின் தேவை பூர்த்தியடையாமையினால் மிரிஹான உள்நாட்டு பால் மா விற்பனை நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி கைகூடவில்லை. பின்னர் பால்மா உற்பத்தி நிறுவனத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட மக்கள் பொலிஸாரின் தலையீட்டுடன் கலைக்கப்பட்டனர். டோக்கன் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்திய பொலிஸார், இன்று டோக்கனை பெற்றுக்கொண்டு, அடுத்த நாள் பால் மாவை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை அறிவித்துள்ளனர். எவ்வாறாயினும், மக்கள் மீண்டும் பால் மாவை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். காலி நகரிலும் பால் மா கொள்வனவிற்காக மக்கள் இன்று காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.