பெருந்தோட்டத்துறையால் இவ்வருடம் 4 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

by Staff Writer 30-12-2021 | 5:44 PM
Colombo (News 1st) இறப்பர், தென்னை, கறுவா ஏற்றுமதியூடாக இந்த வருடம் 4 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. பெருந்தோட்டத்துறை வரலாற்றில் பதிவான மிக கூடுதலான ஏற்றுமதி வருமானம் இதுவாகும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருந்தோட்டத்துறையில் சில சிக்கல்கள் நிலவுகின்ற போதிலும், 2021 ஆம் ஆண்டு பொன்னான வருடமாக அமைந்ததாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன கூறினார். தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியாமற்போனாலும் இந்த வருடத்தில் 305 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட்டமையால், பெருந்தோட்டத்துறையும் விவசாயமும் பாரிய அளவில் சவால்களை எதிர்நோக்கியதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் தெரிவித்தார். எனினும், சில பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்ட நிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் தேவையான இரசாயன உரம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார். தேயிலை உற்பத்தியில் அடுத்த வருடம் அதிக இலாபத்தை ஈட்டுவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.