இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை 

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை 

by Staff Writer 29-12-2021 | 11:29 AM
Colombo (News 1st) மியன்மாரில் கைது செய்யப்பட்ட 07 இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த நவம்பர் 15 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள், கடந்த நவம்பர் 29 ஆம் திகதி மியன்மாரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து இதுவரை தமக்கு அறிவிக்கவில்லை என உறவினர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து கடற்றொழில் திணைக்களத்திடம் வினவியபோது, மியன்மாரின் தற்போதைய இராணுவ ஆட்சியாளர்கள், நாட்டின் கடல் எல்லைக்குள் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்தி வருவதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். எனினும், இலங்கை மீனவர்களை மீட்பதற்கு வெளிவிவகார அமைச்சின் ஊடாக சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.