திருகோணமலை எண்ணெய் குதங்களை நிர்வகிப்பதற்கு புதிய நிறுவனம் ஸ்தாபிப்பு

by Staff Writer 29-12-2021 | 8:20 AM
Colombo (News 1st) இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து Trinco Petroleum Terminal Ltd என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். IOC நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள எண்ணெய் குதங்களிலிருந்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் பங்கினை நிர்வகிப்பதற்காக குறித்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறித்த எண்ணெய் குதங்களின் ஒரு பகுதியை மீண்டும் அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். IOC நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள திருகோணமலையின் 99 எண்ணெய் குதங்களின் பெரும் பகுதியை மீண்டும் பெற்றுக் கொள்வது குறித்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அரச சொத்தான Trinco Petroleum Terminal Ltd நிறுவனத்தின் கீழ் செயற்படும் எண்ணெய் குதங்கள் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுச்சேர்ப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் அடுத்த மாதத்திற்குள் நிறைவடையும் என அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்