ராகலை தீ: சந்தேகநபரை மன்றில் ஆஜர்ப்படுத்த உத்தரவு

ராகலை தீ விபத்து: சந்தேகநபரை மன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு

by Staff Writer 27-12-2021 | 7:02 PM
Colombo (News 1st) நுவரெலியா - ராகலை தோட்டத்தில் ஐவரின் உயிர்கள் தீக்கிரையாகிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வலப்பனை நீதவான் டி.ஆர்.எஸ். ஜினதாச முன்னிலையில் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (27) நடைபெற்றது. இன்றைய தினம் சந்தேகநபரை ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டிருந்த போதிலும், கொரோனா தொற்று காரணமாக சந்தேகநபரை ஆஜர்ப்படுத்த முடியாதுபோனதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த வழக்கு தவணையின் போது, தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு சந்தேகநபரை மன்றில் ஆஜர்ப்படுத்துமாறு வலப்பனை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராகலையில் இடம்பெற்ற தீச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தங்கையா ரவீந்திரன் என்ற 27 வயதான இளைஞர் கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். ராகலை தோட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வயது மற்றும் 11 வயதான சிறுவர்கள், அவர்களின் 34 வயதான தாய், 60 மற்றும் 55 வயதான தாயின் பெற்றோர் என ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.