பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவிற்கு TNA இரங்கல்

நித்திய இளைப்பாறிய பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரங்கல்

by Staff Writer 27-12-2021 | 2:52 PM
Colombo (News 1st) நித்திய இளைப்பாறிய பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் (Desmond Tutu) மறைவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவில் இனவாதத்திற்கு எதிராகவும் உலகில் அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் போராடியவர் மட்டுமல்லாது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமாகவும் பேராயர் Desmond Tutu அயராது உழைத்தவர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள இuங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றிய அவர் நீதியும் கருணையும் ஒன்றுக்கொன்று முரணானவையல்ல, பிரிக்கமுடியாத முழுமையின் இரு அங்கங்கள் என்பதை காண்பித்தார் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து ‘எல்டர்ஸ்’ குழு வெளியிட்ட அறிக்கைகளை நன்றியோடு நினைவு கூருவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ‘மன்னிப்பு இன்றி எதிர்காலம் இல்லை’ என்பதை பேராயர் Desmond Tutu வாழ்ந்து காண்பித்ததாகவும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் பெயர் குறிப்பிட்டு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்படடுள்ளது.