திரைப்பட பாணியில் இடம்பெற்ற சிறுமியின் கொலை: தாய், தந்தை உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

by Staff Writer 25-12-2021 | 3:42 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - மூங்கிலாறு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு நீதவான் ரி. சரவணராஜா முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று (25) ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது எதிர்வரும் 04 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொலை தொடர்பில் ஏற்கனவே சிறுமியின் சகோதரியின் கணவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த கொலை தொடர்பில் மேலும் பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மைத்துனர் உறவுமுறையான நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் கூறினர். அவரிடம் தேவையான வாக்குமூலங்களை பதிவு செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிறுமியின் வீட்டை அண்மித்து வசிப்பவர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கடந்த 15 ஆம் திகதி காணாமற்போன சிறுமி, கொலை செய்யப்பட்ட நிலையில் 18 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். திரைப்பட பாணியில் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்