திருக்கோவில் துப்பாக்கி சூடு: நடந்தது என்ன?

திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : சந்தேகநபருக்கு விளக்கமறியல்

by Staff Writer 25-12-2021 | 6:48 PM
Colombo (News 1st) அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் நேற்றிரவு (24) துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்சா முன்னிலையில் இன்று (25) மாலை சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் 06ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு (24) நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கான்ஸ்டபிள் இருவரும் சாரதி கான்ஸ்டபிள் ஒருவருமே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மேலும் 03 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் திருக்கோவில், கல்முனை மற்றும் அக்கரைப்பற்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சடலங்களையும் இன்று (25) காலை பார்வையிட்ட அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்சா, அதன்பின்னர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தையும் பார்வையிட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். அதன்பின்னர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சார்ஜன்ட் தனது பிரத்தியேக வாகனத்தில் அத்திமலை பகுதிக்கு சென்றுள்ளதுடன், T-56 ரக இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 19 ரவைகளுடன் அவர் அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் கைது செய்யப்பட்ட சார்ஜன்ட், மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ், அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.