திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழப்பு

by Staff Writer 25-12-2021 | 2:57 PM
Colombo (News 1st) அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் நேற்றிரவு (24) நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மேலும் 03 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார். திருக்கோவில், கல்முனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய வைத்தியசாலைகளில் இவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கான்ஸ்டபிள் இருவரும் சாரதி கான்ஸ்டபிள் ஒருவருமே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். அதன்பின்னர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சார்ஜன்ட் தனது பிரத்தியேக வாகனத்தில் அத்திமலை பகுதிக்கு சென்றுள்ளதுடன், T-56ரக இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 19 ரவைகளுடன் அவர் அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ், அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.